350% வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் - 60வது முறையாக டிரம்ப் பேச்சு
- இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
- அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹ்லகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி இந்திய ராணுவம் மே 7 அன்று ஆபரேஷன் சிந்தூர் மூலம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடந்த மோதல் மே 9 அன்று அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்தை தானே ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இந்நிலையில் 60வது முறையாக டிரம்ப், வரி விதிப்பேன் என மிரட்டி இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கலந்து கொண்ட அமெரிக்க-சவுதி முதலீட்டு மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோதல்களை தீர்ப்பதில் நான் ஒரு நிபுணர். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக இருந்தன.
நீங்கள் போருக்குச் செல்லலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் 350 சதவீத வரிகளை விதிப்பேன் என்று நான் சொன்னேன். உங்களுடன் அமெரிக்கா இனி எந்த வர்த்தகமும் செய்யாது என சொன்னேன்.
நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அணு ஆயுதத்தால் தாக்கி மில்லியன் கணக்கான மக்களை கொன்று, அந்த அணு ஆயுத தூசு லாஸ் ஏஞ்சல்ஸ் மேல் படிய நான் அனுமதிக்கப்போவதில்லை என்று சொன்னேன்.
350 சதவீத வரி விதிக்க எல்லாம் தயாராக இருந்தது. எந்த அதிபரும் போர்களை நிறுத்த வரிகளை பயன்படுத்தியதில்லை. ஆனால் நான் நிறுத்திய 8 போர்களில் 5 போர்களை இதன்மூலமே நிறுத்தினேன்" என்று கூறினார்.
போரை நிறுத்தியதாக டிரம்ப் கூறிய கருத்தை பாகிஸ்தான் ஆமோதித்த நிலையில் இந்தியா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து 93 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.