விடுதலை செய்யப்படும் 3 பிணைக்கைதிகள் பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்
- இதுவரை 21 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
- இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.
பிணைக்கைதிகளில் 3 ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29), சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்கிறது.
இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.