உலகம்

வங்காளதேசத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? - விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Published On 2026-02-12 10:55 IST   |   Update On 2026-02-12 11:02:00 IST
  • வங்காளதேச பாராளுமன்றத்தின் 299 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு.
  • வாக்குச்சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வரும் பொதுமக்கள்.

வங்காளதேசத்தில் இன்று காலை 7.30 மணிக்கு பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு தொடங்கியது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு பிறகு 18 மாதங்களாக முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வந்த நிலையில் இந்த தேர்தல் கவனத்தை ஈர்த்துள்ளது. 350 தொகுதிகளை கொண்ட வங்காளதேச பாராளுமன்றத்தில் 299 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 50 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கப்பட்ட இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் விகிதா சார முறையில் தேர்வு செய்யப்படும்.

தேர்தலில் தாரிக் ரகுமானின் வங்காளதேச தேசியவாத கட்சி தலைமையிலான கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைமையிலான கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. மேலும் சில கட்சிகளும் களத்தில் உள்ளன.

தேர்தலையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சுமார் 9.58 லட்சம் பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். மொத்தமுள்ள 42,779 வாக்குச்சாவடி மையங்களில் 90 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. குறிப்பாக தலைநகர் டாக்கா வில் பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. அதேபோல் நாடு முழுவதும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர். டாக்கா-17 தொகுதியில் போட்டியிடும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் தாரிக் ரகுமான் தனது வாக்கை பதிவு செய்தார்.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவர் ஷபிகுர் ரகுமான் வாக்களித்தார். தேர்தல் நேரத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதிலும் சில இடங்களில் பிரச்சினை ஏற்பட்டன. போகுரா பகுதி வாக்குச்சாவடி அருகே பி.என்.பி கட்சியின் மாணவர் தலைவர் மிலோன் மியா கத்தியால் குத்தப்பட்டார்.

பரிசாலின் பாபுகஞ்ச் உபாசிலா பகுதியில் பணம் மற்றும் தேர்தல் சீட்டுகளுடன் திரிந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். சில மாவட்டங்களில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.

வாக்குப்பதிவு மாலை 4.30 மணிக்கு முடிவடையும். அதன்பின் உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தலின் முழுமையான வெற்றி விவரம் நாளை தெரியவரும். மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் கலிதா ஜியா மறைவுக்கு அவரது மகன் தாரிக் ரகுமான் லண்டனில் இருந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பி தேர்தலில் போட்டியிடுகிறார். அக்கட்சிக்கு ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கடும் சவாலாக உள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி கூட்டணியில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமாக இருந்த மாணவர் இயக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலுடன் 84 அம்ச ஜனநாயக சீா்திருத்தங்களை உள்ளடக்கிய 'ஜூலை தேசிய சாசனம் 2025' மீதான மக்கள் வாக் கெடுப்பும் நடைபெற்றது.

Tags:    

Similar News