இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது - டிரம்ப்
- அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்தும் விதமாக ஒப்பந்தம் அமைந்துள்ளது.
- இந்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தும் என்றும் டிரம்ப் பேச்சு.
இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சமீபத்தில் எட்டப்பட்டது. இதுதொடர்பாக இருநாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டன. மேலும், இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:-
உலகின் முதன்மையான எரிசக்தி உற்பத்தியாளராக அமெரிக்கா உள்ளது. நாம் ஒரு பெரிய எரிசக்தி ஏற்றுமதியாளராக மாறி வருகிறோம். கடந்த சில மாதங்களில் நமது நிலக்கரி ஏற்றுமதியை வியத்தகு முறையில் அதிகரிக்க இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பிற நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளோம்.
நமது நிலக்கரியின் தரம் உலகில் எங்கும் சிறந்ததாக இருக்க வேண்டும். சர்வதேச சந்தைகளில் அமெரிக்க நிலக்கரியை ஒரு சிறந்த தயாரிப்பாக நிலைநிறுத்துவதற்கான ஒரு பகுதியாக இந்தியாவுடனான ஒப்பந்தம் அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வெளிநாடுகளில் நிலக்கரி ஏற்றுமதியை கூர்மையாக அதிகரிக்கவும் அமெரிக்காவின் ஏற்றுமதி திறனை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. நாட்டின் மாற்றம் விரைவானது மற்றும் தீர்க்கமானது. அது இனி உள்நாட்டு விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்துவதில்லை.
உலகளாவிய ஏற்றுமதியில் கவனம் செலுத்தி அதை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.