உலகம்

ஃபிட்டியாவை தொடர்ந்து மடகாஸ்கரை உலுக்கிய கெசானி புயல் - 20 பேர் பலி!

Published On 2026-02-11 21:57 IST   |   Update On 2026-02-11 21:57:00 IST
  • புயலின் தாக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 66 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன.
  • ஜனவரி 31 ஆம் தேதி வடமேற்கு மடகாஸ்கரை வெப்பமண்டல சூறாவளி ஃபிட்டியா தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், இரண்டாவது பெரிய புயல் தாக்கியதால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.

மடகாஸ்கரில் கெசானி புயலால் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டோமாசினாவில் நேற்றிரவு புயல் கரையை கடக்கும்போது பெய்த கனமழை, காற்றால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 20 பேர் இறந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் தேசிய இடர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புயலின் தாக்கத்தால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. 66 வீடுகள் முற்றிலும் இடிந்துள்ளன. டோமாசினாவில் 90 சதவீத வீடுகளின் கூரைகள் புயலால் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து பலவீனமடைந்து வருகிறது. எனினும், தலைநகர் அண்டனானரிவோ உட்பட பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ள அபாயம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி வடமேற்கு மடகாஸ்கரை வெப்பமண்டல சூறாவளி ஃபிட்டியா தாக்கிய இரண்டு வாரங்களுக்குள், இரண்டாவது பெரிய புயல் தாக்கியதால் மீட்புப் பணிகள் சவாலாக உள்ளன.  அக்டோபர் மாதம் நடந்த ராணுவப் புரட்சிக்கு பிறகு, மடகாஸ்கரின் அதிகாரத்தைக் கைப்பற்றிய கர்னல் மைக்கேல் ஆண்ட்ரியானிரினா புயலால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்யவும், பொதுமக்களைச் சந்திக்கவும் டோமாசினா நகருக்குச் சென்றார். இது குறித்த வீடியோக்கள் அதிபர் அலுவலகத்தின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Tags:    

Similar News