உலகம்

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் FBI இயக்குநராக நியமனம் - டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

Published On 2024-12-01 11:33 IST   |   Update On 2024-12-01 11:33:00 IST
  • அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.
  • அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்.

அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க உள்ளார். அதிபர் பதவியேற்க இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து வருகிறார்.

இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் இடம்பெற்று வருகின்றனர். அந்த வரிசையில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு எஃப்.பி.ஐ. (FBI) இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பென்டகன் அதிகாரி காஷ்யப் படேல்-ஐ டிரம்ப் நியமனம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஷ்யப் சிறந்த வழக்கறிஞர் மற்றும் புலனாய்வு அதிகாரி. அமெரிக்காவிற்கு முன்னுரிமை என்பதை தனது கொள்கையாக கொண்ட அவர், ஊழலை எதிர்த்தும், நீதியை காக்கவும், அமெரிக்க மக்களை பாதுகாக்கவும் உழைத்து வருகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய எஃப்.பி.ஐ. இயக்குநராக இருக்கும் கிறிஸ்டோபர் ரே-வை, கடந்த 2017 ஆம் ஆண்டு டொனால்டு டிரம்ப் தான் நியமித்து இருந்தார். எனினும், தன் மீதான வழக்குகளை எஃப்.பி.ஐ. கையாண்ட விதம் குறித்தும் அதன் இயக்குநர் கிறிஸ்டோபர் மீதும் டொனால்டு டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் எஃப்.பி.ஐ. இயக்குநராக 44 வயதான காஷ்யப் படேல் நியமிக்கப்படுகிறார்.

Tags:    

Similar News