உலகம்

அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்.. டிரம்ப் அரசு அடுத்த அதிரடி

Published On 2025-04-07 09:47 IST   |   Update On 2025-04-07 09:47:00 IST
  • கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
  • இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்நாட்டு வருவாய் சேவை துறையின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த துறையில் நாடு முழுவதும் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

இதற்கிடையே அதிபர் டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் பல்வேறு அரசு துறைகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக கடந்த ஜனவரி மாதம் இத்துறையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். தலைமை மனிதவள அதிகாரி, செயல் ஆணையர் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.

 ஆனால் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து அவர்களில் பலா் மீண்டும் பணியில் சேர்ந்தனர். இந்தநிலையில் தற்போது மேலும் 20 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் 20 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இ-மெயிலில் அனுப்பப்பட்டு உள்ளன. அதேசமயம் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையானது அடுத்த மாதத்தின் (மே) நடுப்பகுதியில் அமலுக்கு வரும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

இதற்கிடையே டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்கை எதிர்த்து அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News