தமிழ்நாடு செய்திகள்

TVK Vijay | தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே? - த.வெ.க. தலைவர் விஜய்

Published On 2026-03-12 09:27 IST   |   Update On 2026-03-12 09:27:00 IST
  • நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
  • திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

த.வெ.க. தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.

இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.

சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.

மேலும், நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.

நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.

மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.

சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.

கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.

சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.

கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.

திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...

எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.

இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?

பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?

தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.

தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?

இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News