PM Modi | பிரதமர் மோடி கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் - ஆர்.எஸ்.பாரதி
- கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டிருக்கிறது.
- தமிழ்நாட்டில் ரூ.8 ஆயிரம் கோடியை ஊரக பகுதிகளில் சாலைகளுக்கு செலவு செய்திருக்கிறோம்.
திருச்சியில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியை விட மத்திய பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்பட்டு உள்ளதாக திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். அவர் கூறுகையில்,
கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கி ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டிருக்கிறது. இது கடந்த காங்கிரஸ் - தி.மு.க. அரசாங்கத்தை விட பல மடங்கு அதிகம்.
கடந்த 10 ஆண்டுகளிலே உள் கட்டமைப்பு நிதிக்கு, அதற்கு முந்தைய 10 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 3 மடங்கு அதிகமாகி இருக்கிறது. மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.57 ஆயிரம் கோடியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செலவு செய்துள்ளது.
கடந்த 2004-2014-ம் ஆண்டு காங்கிரஸ் - தி.மு.க. அரசாங்கத்தில் செய்த தொகையை விட இது 4 மடங்கு அதிகமானது. தமிழ்நாட்டில் ரூ.8 ஆயிரம் கோடியை ஊரக பகுதிகளில் சாலைகளுக்கு செலவு செய்திருக்கிறோம். அவர்களது அரசில் செய்ததை விட 3 மடங்கு அதிகமாகும் என்று கூறினார்.
இந்நிலையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கிய ஆதாரங்களைக் காட்ட முடியுமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு 3 மடங்கு நிதி வழங்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று அவர் கூறி உள்ளார்.