தமிழ்நாடு செய்திகள்

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல்: நாளை வேட்புமனு பெறப்படும் என அறிவிப்பு

Published On 2025-04-10 16:40 IST   |   Update On 2025-04-10 16:40:00 IST
  • மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.
  • நாளை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை விருப்பமனுவை சமர்ப்பிக்கலாம்.

தமிழக பாஜக துணைத் தலைவரும், மாநில அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது கட்சியின் அமைப்பு தேர்தலின் இறுதிக் கட்டத்தை நாம் அடைந்துள்ளோம். கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் முடிந்து தற்பொழுது இறுதியாக மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்கண்ட தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாளை 11.04.2025, வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாநில தலைவருக்கான தேர்தல்

மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் F பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கான தேர்தல்

தேசிய பொதுக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் E பூர்த்தி செய்ய வேண்டும்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் முன் மொழிய மற்றொரு மாநில பொதுக்குழு உறுப்பினர் வழிமொழிய வேண்டும்.

இவ்வாறு சக்ரவர்த்தி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

12ஆம் தேதி மாலை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News