தமிழ்நாடு செய்திகள்

மயிலாடுதுறை மீனவர்கள் கைது - அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published On 2026-01-21 14:41 IST   |   Update On 2026-01-21 14:41:00 IST
  • 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்
  • இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர சமூகத்தினருக்கு கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் கட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும். அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறுவதைத் தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

Tags:    

Similar News