எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு விதித்த தடை நீட்டிப்பு - உச்ச நீதிமன்றம்
- கரூரில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர்.
- நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர்.
எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் முறைக்கு தடை விதிக்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இச்சடங்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதனையடுத்து எச்சில் இலையில் உருளும் சடங்கை நடத்த அனுமதிக்ககோரி நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பக்ஷி அமர்வில் இன்று(மே.05) விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற ஒரு அங்கபிரதட்சணம் சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்தையும் ஆராய்ந்தே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, அந்த தடை உத்தரவை நாங்கள் நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.
மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து உத்தரவிட்டது.