எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது- ஜெயக்குமார்
- எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது.
- எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மதுரையில் இன்று நடைபெற்ற தவெகவின் 2வது மாநாட்டில் அக்கட்சி தலைவர் விஜய், எம்ஜிஆர் குறித்தும், அதிமுக குறித்தும் பேசினார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
எல்லோராலும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆகிட முடியாது. எல்லோராலும் புரட்சித் தலைவி அம்மா ஆகிட முடியாது. உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவர். உலகத்திற்கே ஒரு புரட்சித் தலைவி அம்மா.
அதனால், வாக்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக அண்ணா பெயரை பயன்படுத்துறது, அண்ணா புகைப்படம் பயன்படுத்துறது, எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துறது, நான் தான் புரட்சித் தலைவர் மாதிரி சொல்வது எல்லாம் தேர்தல் யுக்தி.
இதெல்லாம் எப்படி சொன்னாலும் சரி, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கம் அதிமுக. அவர்தான் கட்சிக்கே முழுமையான சொந்தக்காரர்.
அதனால், அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்த கை, வேறு எந்த கட்சிக்கும் வாக்குகள் போடாது. எங்கள் தலைவரின் பெயர் கூறாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.
எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டது என்பது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அது உங்களுக்கு வாக்குகளாக வருமா என்றால் நிச்சயமாக வராது. அதை மட்டும் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.