தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்: அமைச்சர் ரகுபதி

Published On 2026-02-09 13:10 IST   |   Update On 2026-02-09 13:10:00 IST
  • இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.
  • ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பால் பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

த.வெ.க.வுக்கு 42 சதவீதம் வாக்கு வங்கி இருப்பதாக கூறுகின்றனர். அதை திருப்பி 24 இருந்தாலே பெரிய விஷயம். செங்கோட்டையனுக்கு அரசியல் புள்ளி விவரம் தெரியாது. அவருக்கு டூர் போட தெரியுமே தவிர, மக்களின் மனதை அறிய தெரியாது. 42 இல்லை 24 கூட கிடையாது, அதற்கும் குறைவுதான்.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஒத்துப்போகாது என்பது எடப்பாடி பழனிசாமியின் கனவு, அவரது எதிர்பார்ப்பு. அதனால் அதைச் சொல்கிறார். எடப்பாடி எப்போதும் கனவு கண்டு கொண்டிருப்பவர் என்பது நாடறிந்த உண்மை. அன்புமணி ராமதாசுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்? அவர் மருத்துவத்தில் ஏதாவது சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. அவர் பொருளாதார நிபுணரும் அல்ல, மேதையும் அல்ல. அவர் சொல்வது ஏற்கத்தக்கதும் அல்ல. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தந்துள்ள அரசு திராவிட மாடல் அரசு. இந்திய பொருளாதாரத்தை உயர்த்தி இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு.

பிரதமர் மோடி மலேசியாவுக்கு சென்றால் தமிழை புகழ்ந்து பேசுவார். ஏனென்றால் மலேசியாவில் தமிழ்நாட்டில் இருந்து சென்றுள்ள இந்தியர்கள் தான் அதிகம். அதனால் அப்படி பேசுவார். ஆனால் ஒடிசாவுக்கு போனால் தமிழனை திருடன் என்பார். தமிழ் திருடனின் கையில் ஒடிசாவின் சாவி இருக்கிறது என்பார். பீகாருக்கு போனால் தமிழனை திருடன் என்பார். அங்கே எல்லாம் தமிழர்கள் திருடர்கள், ஆனால் வெளிநாட்டிற்கு சென்றால் அவர்களின் பார்வையில் தமிழர்கள் இணைப்பு பாலமாக விளங்க கூடியவர்கள்.

காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி குறித்து பேச குழு அமைக்க எப்போது சரியான நேரம் வருகிறதோ அப்போது குழு அமைப்போமே தவிர, இது மிகப்பெரிய கூட்டணி. எல்லோருடனும் பேசுவதற்கு சுருக்கமான காலத்தில் அந்த கூட்டணியை பேசி முடிக்க வேண்டும். அதற்கு ஏற்றார் போல் எங்கள் தலைவர் வியூகம் வகுத்து கூட்டணியை முடிவு செய்வார். அதில் எந்தவித பிசுபிசுப்பும் வராது யாரும் கவலைப்பட வேண்டாம்.

ஆட்சியில் பங்கு கேட்க எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. அதைக் கொடுக்கின்ற இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார். அவரை பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும். அது கூட்டணி கட்சி ஆதரவோடு தொடர வேண்டும் என்பது தான் எங்கள் தலைவரின் விருப்பம். எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி என்பது பொய்பாடி வாக்குறுதிகள். எல்லாமே பொய் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அவர் ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. அவரை மக்கள் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் வராது. திராவிட மாடல் ஆட்சி தொடரும்.

எங்கள் கூட்டணியை பற்றி பேச ஆதவ் அர்ஜூனா யார்? எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் அடிமை போல நடத்துவதாக கூறுகிறார்களா. எடப்பாடி பழனிசாமி தான் அடிமை பழனிசாமி. விஜய்யின் அடிமை ஆதவ் அர்ஜூனா. இந்த அடிமைகளின் பேச்சுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் கூட்டணியில் உள்ளவர்களை சம இடத்தில் வைத்துள்ளோம். யாரையும் ஆண்டான் அடிமையை போல் நடத்துகின்ற பழக்கம் தி.மு.க.வுக்கு எந்த காலத்திலும் கிடையாது என்றார். 

Tags:    

Similar News