தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்- திருமாவளவன்
- பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
- தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆளும் பா.ஜ.க.விற்கு பாராளுமன்றத்தை நடத்துவதற்கே விருப்பமில்லை. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளும் கட்சியினர் அடாவடித்தனமாக நடந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை, நூல்களில் இருந்தும் இதழ்களில் இருந்தும் மேற்கோள் காட்டி பேசுவது வழக்கமான ஒன்றுதான்.
ஆனால் ராகுல் காந்தி பேசும் போது வெளியிடப்படாத ஒரு நூலை காட்டி பேசக்கூடாது என்று கூறி அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி கடந்த வாரம் கூட்டதொடரையே அவர்கள் நடத்தவில்லை.
இந்த வாரமும் அதே நிலை நீடிக்கும் என நாங்கள் கருதுகிறோம். பேசுவதற்கான சூழல் அமைந்தால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்புவோம். உரிமைக் குரல் எழுப்புவோம்.
தமிழ்நாட்டிற்கு கல்வி உள்ளிட்ட பல துறைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதியை இன்னும் ஒதுக்காமல் இருக்கின்றனர். அதேபோல் ஒவ்வொரு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மாநில வாரியாக கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்யும் போது தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்ற கேள்வியை நாங்கள் எழுப்புவோம்.
பா.ஜ.க. ஆளாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களை திட்டமிட்டு வஞ்சித்து நிதிகளை ஒதுக்காமல் மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர். தமிழ்நாடு அந்த வரிசையில் ஒன்று. அதேபோல் மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது என்றார்.