தமிழ்நாடு செய்திகள்

கண்ணதாசன் நகர், எம்.கே.பி.நகர்: நவீன பஸ் நிலையங்கள் திறக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் குறைந்தது

Published On 2026-02-09 12:59 IST   |   Update On 2026-02-09 12:59:00 IST
  • முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது.
  • 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது.

சென்னை:

வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த வகையில் கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் மற்றும் எம்.கே. பி நகர் முல்லை நகர் பஸ் நிலையம் ஆகியவை புதிதாக கட்டப்பட்டது.

பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்ற பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 2 பஸ் நிலையங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நவீன பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு அடிப்படையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குடிநீர், கழிப்பிட வசதி, இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பான பயணத்திற்கு மின் விளக்குகள் பஸ் நிலையம் சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 2 பஸ் நிலையங்களையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அனைத்து பஸ்களும் இன்று முதல் புதிய பஸ் நிலையங்களில் இருந்து சேவையை தொடங்கியுள்ளன.

புதிய பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரையில் நடைபெற்றதால் அங்கிருந்து புறப்பட்ட பஸ்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இது பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை கொடுத்தது.

குறிப்பாக கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் எதிரே சாலையின் இருபுறமும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் வாகனங்கள் அந்த வழியாக கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. கடுமையான நெரிசலில் பொதுமக்கள் சிக்கி இருந்த நிலையில் தற்போது அதற்கு விடிவு கிடைத்துள்ளது.

நவீன பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தின் உள்ளே இருந்து இயக்கப்படுகிறது.

கண்ணதாசன் நகர் பஸ் நிலையத்தில் இருந்து 94 சேவைகள் தினமும் இயக்கப்படுகிறது. கேளம்பாக்கம், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அங்கிருந்து பஸ்கள் புறப்பட்டு செல்கிறது.

அதேபோல முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து 21 சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வந்திருப்பதால் பயணிகள் வெளியே காத்து நிற்காமல் அமர்ந்து பயணத்தை தொடர முடிகிறது.

இந்த 2 புதிய பஸ் நிலையங்கள் வட சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து உள்ளது. அதனை அப்பகுதி மக்கள் வரவேற்பதோடு அதிகாலையில் பயமில்லாமல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல முடியும் எனவும் இரவு நேரங்களிலும் பாதுகாப்பாக பயணத்தை மேற்கொள்ள முடியும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News