தமிழ்நாடு தொழில் துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருவதற்கு டாடா மோட்டார்ஸ் தொழிற் நிறுவனமே ஒரு சாட்சி- முதலமைச்சர் பேச்சு
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன்.
- இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் மிக முக்கியமானது டாடா நிறுவனம்.
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகம் துறை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் ரூ.9 ஆயிரம் கோடியில் முதலீடு மற்றும் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் டாடா மோட்டார்ஸ் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந்தேதி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிலையில் டாடா தொழிற்சாலைகளை திறந்து வைத்து தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை தொடங்கி வைப்பதற்காக இன்று மு.க.ஸ்டாலின் பனபாக்கத்திற்கு வருகை தந்தார்.
வழி நெடுகிலும் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மேளதாளம், தாரை தப்பட்டை, ஒயிலாட்டம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட தி.மு.க. செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் டாடா தொழிற்சாலை வளாகத்தில் உள்ள ரத்தன் டாடா உருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து டாடா தொழிற்சாலையினை திறந்து வைத்து, தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள முதல் வாகனத்தின் இயக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த ஆலையின் முதலாவது ஜாகுவார் லேண்ட்ரோவர் வாகனத்தை ஓட்டி பார்த்தார். கார்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை தொடங்கி வைத்ததில் மிகவும் பெருமை அடைகிறேன். இந்தியாவின் தொழில் நிறுவனங்களில் மிக முக்கியமானது டாடா நிறுவனம்.
ஆட்டோமொபைல் ஸ்டீல் ஏர்லைன்ஸ் தொலைதொடர்பு என பல துறைகளில் தடம் பதித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ள நிறுவனம்தான் டாடா குழுமம். இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின்வாகனத்தின் தலைநகரம் தமிழ்நாடு தான். தொழில்துறை வளர்ச்சியில் டி.ஆர்.பி. ராஜா சிறப்பாக செயலாற்றி வருகிறார்.
தமிழ்நாடு தொழில்துறையில் முன்னோடியாக திகழ்ந்து வருவதற்கு இந்த டாடா மோட்டார்ஸ் தொழில் நிறுவனமே ஒரு சாட்சி.
உலக நாடுகளே தொழில் முதலீட்டின் தமிழ்நாட்டிடம் போட்டி போட்டு வருகிறார்கள். தமிழ்நாடு வந்தோரை வாழவைக்கும் அதுதான் எங்கள் பண்பாடு. பொருளாதாரம் பெண்கள் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. இன்னும் பல்வேறு தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு. ஆர்.காந்தி, டி.ஆர்.பி.ராஜா, ஜெகத்ரட்சகன் எம்.பி. சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் வருகையையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.