தமிழ்நாடு செய்திகள்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி: விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்

Published On 2025-12-13 07:29 IST   |   Update On 2025-12-13 07:29:00 IST
  • விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
  • விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர்கள், உரிமையாளர்கள், காயமடைந்தவர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருந்தது.

இதேபோல் த.வெ.க. மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராகி தங்களது தரப்பு விளக்கங்களை அளித்திருந்தனர். மேலும் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்ட வாகனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் பதிவுகளும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கில் விரைவில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விஜய்யிடம் விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதில் த.வெ.க. தலைவர் விஜய்யை கரூருக்கு அழைத்து விசாரணை நடத்துவதில் பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதால் அவரிடம் சென்னையிலேயே விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

Tags:    

Similar News