தமிழ்நாடு செய்திகள்

கூட்டத்திற்கு நடுவே இடையூறாக வந்த ஆம்புலன்ஸ் - ஓட்டுநரை எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

Published On 2025-08-19 09:12 IST   |   Update On 2025-08-19 09:12:00 IST
  • தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர்.
  • மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். அவரை புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். இரவு 10.30 மணி அளவில் அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கிய போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கின்றனர்.

மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?. இதுதான் தி.மு.க.வின் கேவலமான செயலாகும். இந்த ஆம்புலன்சில் நோயாளி இல்லை. நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது. நான் பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்களை இடையூறாக விட்டு உள்ளனர். இதன் மூலம் எச்சரிக்கை விடுக்கிறேன். அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார். இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

Similar News