தமிழ்நாடு செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் பெய்த கோடை மழையால் நிரம்பி வழியும் தடுப்பணைகள்

Published On 2025-05-22 17:27 IST   |   Update On 2025-05-22 17:27:00 IST
  • வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.
  • வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், கடந்த 4-ந்தேதி அக்னி நட்சத்திர காலம் தொடங்கியது. அன்று முதல் தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. காய்ந்து போன மரங்கள் துளிர்விட தொடங்கின. பூமியில் வெப்பம் தணிந்தது.

குறிப்பாக கடந்த 4 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து உள்ளது.

வத்தல்மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணையில் மழைநீர் நிரம்பி, உபரிநீராக ஏரிக்கு செல்கிறது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிக பட்சமாக 102.7 டிகிரி பாரான்ஹீட் வெயில் பதிவானது. பகல் நேரத்தில் அனல் காற்று வீசியது.

இதனால் வீட்டில் முடங்கும் நிலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் தருமபுரி நகர பகுதியில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக மாவட்டத்தில் கோடை மழை பெய்து வருகிறது.

இது மக்களுக்கு ஆறுதலாக உள்ளது. தற்போது விவசாய பணிகள் மும்முரமாக நடக்கிறது என்றனர்.

Tags:    

Similar News