தமிழ்நாடு செய்திகள்

சேலத்தில் விஜய் பிரச்சாரம்: தேதியை மாற்ற காரணம் கூறிய காவல்துறை

Published On 2025-11-20 16:00 IST   |   Update On 2025-11-20 16:00:00 IST
  • சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர்.
  • காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சேலத்தில் விஜய் வேறுதேதியில் பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். அதன்படி

டிசம்பர் 4-ந் தேதிக்கு பதில் வேறு தேதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கேட்குமாறு விஜய் தரப்புக்கு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

மேலும் கார்த்திகை தீபம், ஜெயலலிதா நினைவு தினம், பாபர் மசூதி இடிப்பு தினம் வரிசையாக உள்ளதால் வேறு தேதியில் பிரச்சாரம் மெற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News