பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: கேள்விக் கணைகளை தொடுத்த திமுக எம்.பி.க்கள்
- கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?
- எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இன்று திமுக திமுக எம்.பி.க்கள் பல்வேறு கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பினர்.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1. கழிவுநீர் மேலாண்மையை முழுமையாக இயந்திரமயமாக்கும் திட்டங்கள் கிடப்பில் போட்டுள்ளதா ஒன்றிய அரசு?
திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி
அரக்கோணம் திமுக எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகன்
மார்ச் 2025 நிலவரப்படி, இயந்திரமயமாக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் சுத்திகரிப்பு உபகரணங்களைக் கொண்டுள்ள நகராட்சிகளின் எண்ணிக்கை மற்றும் மனிதர்கள் கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவதை முழுமையாகத் தடுத்துள்ள இடங்களின் விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன் மற்றும் கனிமொழி கருணாநிதி கோரியுள்ளனர். மேலும், கடந்த ஐந்தாண்டுகளில் 'கையால் மலம் அள்ளுவோர் தடைச் சட்டத்தின்' கீழ் நடத்தப்பட்ட ஆய்வுகள் மற்றும் கண்டறியப்பட்ட விதிமீறல்கள் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இயந்திர சாதனங்களைப் பயன்படுத்துவதை வலியுறுத்தும் நிலையான வழிகாட்டுதல்களை (SOP) அரசு வெளியிட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளனர்.
2. கூடங்குளம் அனுமின் நிலையத்திலிருந்து மின்சாரம் எடுக்க ஒன்றிய அரசின் திட்டமென்ன?
திமுக எம்.பி. ஆர். கிரிராஜன்
14,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த திறன் கொண்ட 18 அணு மின் உலைகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது குறித்தும் ஒவ்வொரு உலையையும் முடிக்கும் செலவு மற்றும் நேரம், அணுமின் நிலையங்களை அமைக்கும் இடங்கள் குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையங்களிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அணு மின் நிலையங்களிலும் அதைச் சுற்றியும் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
3. கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின் புதிய இலக்குகள் சாத்தியமா?
திமுக எம்.பி. பி. வில்சன்
கார்பன் கடன் வர்த்தக திட்டத்தின்(CCTS) கீழ் கூடுதல் தீவிர கார்பன் துறைகளுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பசுமை வாயு வெளியேற்ற (GEI) இலக்குகள் குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் கேள்வி எழுப்பினார். பெட்ரோலியம் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்கள், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியம் உட்பட இந்த வழிமுறையின் கீழ் கொண்டுவரப்பட்ட துறைகள் எவை? GEI இலக்குகளை கண்காணித்தல், சரிபார்த்தல் மற்றும் செயல்படுத்துவதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் குறித்தும் அவர் கேட்டுள்ளார்.
4. வெளிநாட்டில் இறக்கும் இந்தியர்ளின் உடல்களை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் தாமதமாக நிறைவேற்றுவது ஏன்?
திமுக எம்.பி. பி. வில்சன்
வெளிநாட்டில் இறக்கும் இந்திய குடிமக்களின் உடல்களை திருப்பி தாய்நாடு கொண்டு வருவதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்க ஏற்கனவே உள்ள அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாதது ஏன் என்றும் அவை சரியாக செயல்படாமல் இருப்பது குறித்தும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன் நாடாளுமன்றத்தில் கேட்டுள்ளார். வெளிநாட்டில் இறந்த இந்தியர்களை திருப்பி அனுப்புவது குறித்து குடும்பங்களிடமிருந்து அரசாங்கம் பெறும் கோரிக்கைகள்மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை எனும் புகார்கள் குறித்து அரசாங்கத்தின் பதில் என்ன என்றும் கேட்டுள்ளார்.
5. தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துக!
திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா
தமிழ்நாட்டில் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரிடம் சில முக்கிய கேள்விகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, மாநிலம் முழுவதும் எரிசக்தி மற்றும் மூலப்பொருளாக எரிவாயுவை விரிவுபடுத்துவதற்கான தற்போதைய நிலை குறித்தும், அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் ஊர்களுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாவட்ட வாரியாக கோரிக்கையின் அடிப்படையில் குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் பணியின் தற்போதைய விவரங்களையும் கோரியுள்ளார்.
6. எரிபொருளில் எத்தனால் கலக்கும் திட்டம் வருமானத்தை பெருக்கி உள்ளதா?
கோவை திமுக எம்.பி. கணபதி ராஜ்குமார்
தேனி எம்.பி. தங்க தமிழ்செல்வன்
தேசிய உயிரி எரிபொருள் கொள்கையின் கீழ், ஒரு லிட்டர் எரிபொருளில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அரசு எட்டியுள்ளதா என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 2014-ல் 1.5% ஆக இருந்த எத்தனால் கலப்பு, 2025-ல் 20% ஆக உயர்ந்ததற்கு கரும்புத் தொழில்துறைக்கு அரசு வழங்கிய வலுவான நிதிச் சலுகைகள் காரணமா என்ற விவரத்தை அவர்கள் கோரியுள்ளனர். மேலும், இந்த எத்தனால் கலப்புத் திட்டமானது பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைத்தல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைத்தல் போன்ற இலக்குகளை அடைந்துள்ளதா என்றும் அவர்கள் கேட்டுள்ளனர். இறுதியாக, இந்த 20% எத்தனால் கலப்பின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களையும் அவர்கள் கோரியுள்ளனர்.
மேலும் தங்களது மற்றொரு கேள்வியில் அவர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைக்கவும், சீரமைக்கவும் நிதி ஆயோக் ஏதேனும் பரிந்துரைகளை வழங்கியுள்ளதா என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். குறிப்பாக, எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்காக ஏஐ வசதியுடன் கூடிய ஒன்றிய டிஜிட்டல் போர்டல் (centralised digital portal) அமைப்பது குறித்த பரிந்துரைகள் மற்றும் அதன் தற்போதைய நிலை பற்றி அவர்கள் கேட்டுள்ளனர். மேலும், இத்தகைய ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளால் பொது வளங்கள் முறையாகப் பயன்படுத்தப்படுமா மற்றும் கடன் வசதி, திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு போன்ற திட்டங்கள் மூலம் எம்எஸ்எம்ஈ வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் என்ன என்பது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
7. அமெரிக்காவின் புதிய வரியால் பாதிக்கும் சிறு, குறு தொழில்கள்
தீர்வு என்ன?
பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேரு
அமெரிக்கா விதித்துள்ள சமீபத்திய வரிகளால் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி, வாகன உதிரிபாகங்கள், தோல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகளைச் சார்ந்த எம்எஸ்எம்ஈ நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசு ஆய்வு செய்துள்ளதா என கேட்டுள்ளார். இந்த வரிகளால் உள்நாட்டு உற்பத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி குறைவு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் குறித்த விவரங்களையும், இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு எம்எஸ்எம்ஈ நிறுவனங்களின் எண்ணிக்கையையும் கோரியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மானியங்கள், குறைந்த வட்டி கடன் அல்லது வரி விலக்கு போன்ற ஏதேனும் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா மற்றும் வருங்காலத்தில் இத்தகைய சவால்களிலிருந்து எம்எஸ்எம்ஈ -களைப் பாதுகாக்க உள்ள திட்டங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
8. குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டலில் கண்காணிக்கும் திட்டத்தின் சாத்தியங்கள் என்ன?
டாக்டர் கலாநிதி வீராசாமி
ஜல் ஜீவன் மிஷன் மற்றும் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கிராமப்புறக் குடிநீர் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க அரசு திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தத் திட்டத்தில் இடம்பெறவிருக்கும் நிகழ்நேர கண்காணிப்புத் திரைகள் (Real-time dashboards), ஐஓடி சென்சார்கள் (IoT Sensors), புவிசார் தகவல் அமைப்பு (GIS mapping) மற்றும் மொபைல் செயலிகள் போன்ற தொழில்நுட்பக் கூறுகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேவைப்படும் நிதி மற்றும் காலக்கெடு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இக்கண்காணிப்பு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இதில் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்தவும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
9. சென்னை மற்றும் ஓசூரில் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் ஆபத்து. அமெரிக்காவின் புதிய வரிக்கு தீர்வு காணுமா ஒன்றிய அரசு?
தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன்
உலகளாவிய வர்த்தக இடையூறுகள் மற்றும் வரி நிச்சயமற்ற தன்மையால், சென்னை மற்றும் ஓசூரில் உள்ள எம்எஸ்எம்ஈ கிளஸ்டர்களில் சுமார் 30 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆபத்தில் உள்ளனவா என்பது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். அண்மைக்காலப் புயல்கள் மற்றும் வெளிப்புறக் காரணிகளால் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வட்டி மானியம் அல்லது சிறப்பு நிவாரணத் தொகுப்புகள் ஏதேனும் வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், 2026-ஆம் ஆண்டிற்கான 95 பில்லியன் ரூபாய் எம்எஸ்எம்ஈ நிதித் திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். 2025-26 காலக்கட்டத்தில் மாநில வாரியாக வழங்கப்பட்ட நிதி விவரங்கள் மற்றும் தமிழ்நாடு போன்ற தொழில் சார்ந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியை நிலைப்படுத்த அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவரங்களைக் கோரியுள்ளார்.
10. முறையாக பயன்படுத்தபடுகிறதா நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின் நிதி?
கள்ளக்குறிச்சி எம்.பி. மலையரசன்
தமிழ்நாட்டில் அடல் புஜல் யோஜனா திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிலத்தடி நீர் மேலாண்மைக்காக கண்டறியப்பட்டுள்ள முன்னுரிமை இடங்களின் எண்ணிக்கை குறித்து விளக்கம் கோரியுள்ளார். இத்திட்டத்தின் கீழ் சமூகப் பங்களிப்பு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் என்ன என்பதையும் கேட்டுள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்காகத் தமிழ்நாட்டிற்கு இதுவரை ஒதுக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விரிவான விவரங்களை கோரியுள்ளார். நிலத்தடி நீரை நிலையான முறையில் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், தண்ணீர் பற்றாக்குறைப் பிரச்சினைகளைத் தீர்க்கவும் இத்திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
11. படுகர் சமூகத்தை பட்டியல் பழங்குடி பிரிவில் சேர்க்கும் கோரிக்கையின்மீது நடவடிக்கை என்ன?
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த்
1931-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஒரு முக்கியமான பழங்குடி இனமாக அங்கீகரிக்கப்பட்ட படுகர் சமூகத்தினரை, தற்போது பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes - ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அரசு கவனித்துள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசிடமிருந்து ஏதேனும் அதிகாரப்பூர்வ முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளனவா மற்றும் அதன் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
மேலும், இக்கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுப்பதற்கான காலக்கெடு ஏதேனும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா, அவ்வாறு இல்லையெனில் அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
12. ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் நிதியை மறுப்பது ஏன்?
ஈரோடு எம்.பி, கே. ஈ. பிரகாஷ் கேள்வி
புது தில்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துகளை அரசு கவனித்துள்ளதா என கேட்டுள்ளார். குறிப்பாக, ஒகேனக்கல் குடிநீர் திட்டம் - இரண்டாம் கட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய தன் பங்கான ரூ. 2,283 கோடியை வழங்க மறுப்பதாலேயே, அத்திட்டத்திற்கான நிதி நடைமுறைகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்திட்டத்தைச் சரியான நேரத்தில் செயல்படுத்தவும், மக்களின் குடிநீர் தேவையைத் தீர்க்கவும் நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க ஒன்றிய அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
13. வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குகிறதா ஒன்றிய அரசு?
தஞ்சாவூர் எம்.பி. முரசொலி
இந்தியாவின் நகர்ப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு, கழிவுநீர் மேலாண்மை முதலியவற்றை வழங்கும் அம்ருத் திட்டம் குறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரிடம் சில முக்கியக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இத்திட்டத்தின் செயல்பாட்டு விவரங்கள் மற்றும் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப் பகிர்வு நடைமுறைகள் குறித்து விளக்கம் கோரியுள்ளார். மேலும், தற்போது நாடு முழுவதும் இத்திட்டத்தின் கீழ் வரும் நகரங்களின் பட்டியல், மாநில வாரியாகவும் திட்ட வாரியாகவும் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதியின் நிலை குறித்தும் வினவியுள்ளார். மாநில அளவில் இத்திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஏதேனும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.
14. வேளான் பதப்படுத்துதலுக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் சிக்கல்களை ஒன்றிய அரசு தீர்க்காதது ஏன்?
காஞ்சிபுரம் எம்.பி. செல்வம்
திருவண்னாமலை எம்.பி. சி. என். அண்ணாதுரை
தமிழ்நாட்டில் வேளாண் பதப்படுத்துதல் மேம்பாட்டிற்கான நவீன உள்கட்டமைப்பு உருவாக்கும் திட்டம் எவ்வளவு தூரம் பயனுள்ள முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்கள் விளக்கம் கோரியுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் மாவட்ட வாரியாக அங்கீகரிக்கப்பட்ட, முடிக்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்களின் விவரங்கள், உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறன் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்த தரவுகளை கேட்டுள்ளனர். மேலும், சிறு மற்றும் குறு விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர் இத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்றும், முறையான விழிப்புணர்வு இல்லாமை அல்லது சிக்கலான நடைமுறைகளால் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இத்திட்டத்தை விரைவுபடுத்தவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி அறுவடைக்கு பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் அரசு எடுத்து வரும் திருத்த நடவடிக்கைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
15. குப்பை மற்றும் கழிவுநீர் மேலாண்மையில் போதிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்காதது ஏன்?
தர்மபுரி எம்.பி. அ. மணி
நாட்டின் நகர்ப்புறங்களில் குப்பை, கழிவு மற்றும் சாக்கடை மேலாண்மை ஒரு கடுமையான பிரச்சினையாக உருவெடுத்துள்ளதா என்பது குறித்தும், அதற்கான காரணங்கள் மற்றும் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட நிதி உதவி குறித்த விவரங்களை ஆண்டு வாரியாகவும், நகரம் வாரியாகவும் கோரியுள்ளார். மேலும், இத்தகைய பணிகளில் மாநிலங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை அரசு மதிப்பீடு செய்துள்ளதா என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
16. எத்தனால் உற்பத்தியில் இலக்கை எட்டுமா இந்தியா?
பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி
கரும்பு தவிர்த்த இதர மூலப்பொருட்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் எத்தனால் உற்பத்தி அளவு எவ்வளவு மற்றும் அவை எந்தெந்த ஆதாரங்களில் (source-wise) இருந்து பெறப்படவுள்ளன என்பது குறித்த விவரங்களை கோரியுள்ளார். மேலும், நாட்டின் எத்தனால் கலப்பு இலக்கை (Ethanol blending target) எட்டுவதற்கு இந்த உற்பத்தி அளவு போதுமானதாக இருக்குமா என்பது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளார்.
17. ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் செயல்பாடுகள் என்ன?
சேலம் திமுக எம்.பி, டி. எம். செல்வகணபதி
ஸ்மார்ட் சிட்டீஸ் மிஷன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்குக் குடிநீர் மற்றும் துப்புரவு வசதிகளுக்காக ஒன்றிய அரசு நிதி வழங்கி வருகிறதா என்பது குறித்தும், கடந்த மூன்று நிதியாண்டுகளில் பல்வேறு நகரங்களுக்கு விடுவிக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு என்பது குறித்தும் விளக்கம் கோரியுள்ளார். மேலும், இத்திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளனவா என்பது உண்மையா என்றும், அவ்வாறு கோரிக்கைகள் இருந்தால் அது தொடர்பாக ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விவரங்களைக் கேட்டுள்ளார்.
18. பாரத்மாலா திட்டத்தின் செயல்பாடுகளில் தாமதங்கள் ஏன்?
ஆரணி எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன்
பாரத்மாலா திட்டத்தின் கீழ் இதுவரை அங்கீகரிக்கப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை, அவற்றின் நீளம் மற்றும் செலவிடப்பட்ட நிதி குறித்த விவரங்களை கோரியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்னும் தொடங்கப்படாமல் உள்ள திட்டங்களின் நிலை மற்றும் கடந்த மூன்று ஆண்டுகளில் முடிக்கப்பட்ட சாலைகளின் நீளம், செலவு மற்றும் காலக்கெடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இத்திட்டத்தால் சரக்கு போக்குவரத்துத் திறன் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள தாக்கம் குறித்து அரசு ஆய்வு செய்துள்ளதா என்றும் விளக்கம் கேட்டுள்ளார். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற சிக்கல்களைத் தீர்த்து, பணிகளை விரைந்து முடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் வேலைவாய்ப்பு, சிறு ஒப்பந்ததாரர்கள் மற்றும் எம்எஸ்எம்ஈ நிறுவனங்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விளக்கம் கோரியுள்ளார்.
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.