தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதா?- அண்ணாமலை கண்டனம்

Published On 2025-09-10 13:30 IST   |   Update On 2025-09-10 13:30:00 IST
  • பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது.
  • தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

சென்னை:

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை அளித்து, நேற்றைய தினம், தி.மு.க. அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. தி.மு.க.வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

தி.மு.க.வினருக்கு சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு. தி.மு.க.வின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News