தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக குறைந்தது

Published On 2026-02-06 10:11 IST   |   Update On 2026-02-06 10:11:00 IST
  • அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது.
  • அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு மேட்டூர் அணை 7 முறை நிரம்பியது. இதையடுத்து உபரி நீர்திறக்கப்பட்டு காவிரி ஆறு வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதற்கிடையே மழை நின்றதால் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

அணைக்கு வரும் நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதியுடன் பாசனத்துக்கு திறந்து விடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.96 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 82 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 54.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News