தமிழ்நாடு செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி- பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை

Published On 2026-02-05 21:55 IST   |   Update On 2026-02-05 21:55:00 IST
  • பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.
  • காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைவாக இருந்தாலும் பொதுமக்கள் கீழ்கண்டவற்றை பின்பற்ற தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும்.

பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயானது மனிதர்களுக்கு பரவும் வாய்ப்பு மிகவும் அரிது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி போன்றவை இந்நோயின் சில அறிகுறிகள் ஆகும்.

இந்நோயானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்கு நேரிடையாகவும் தூய்மை கேடு உள்ள சூழ்நிலையிலும் பரவ வாய்ப்பு உள்ளது.

இது சம்பந்தமாக பொது மக்களுக்கு கீழ்கண்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

ப்ளு போன்ற அறிகுறிகள் (II) இருமல், சளி. காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பறவைகளை கையாள்பவர்கள் குறிப்பாக உடல்நலம் குன்றிய பறவைகளை கையாள்பவர்கள், இறந்த பறவைகளை கையாள்பவர்கள் மற்றும் இறைச்சி கூடத்தில் பணிபுரிபவர்கள் கவனத்துடன் பணிபுரியவும்.

ஏதேனும் ப்ளு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனை /மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

அசாதாரண பறவை இறப்புகள் இருப்பின் உடனே கால் நடை மருத்துவ துறைக்கு தெரிவிக்க வேண்டும். கைகை கழுவுதல் உட்பட தன்சுத்தம் மற்றும் சுற்றுப்புறத்தினை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் சமைக்கப்படாத மற்றும் சரிவர சமைக்கப்படாத முட்டை மற்றும் இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இந்நோய் சம்மந்தமான வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News