அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்கள் ஆக்க கூடாது- அன்புமணி கண்டனம்
- மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக் கூடிய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை பா.ம.க. கண்டிக்கிறது.
- சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக்க அனுமதிக்கும் வகையில் தனியார் பல்கலைக்கழகங்களின் சட்டத்தில் திருத்தம் செய்ய தி.மு.க. அரசு முடிவு செய்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களின் கல்வியையும், சமூகநீதியையும் பாதிக்கக் கூடிய தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை பா.ம.க. கண்டிக்கிறது.
அரசு வேலைவாய்ப்புகளில் குத்தகை முறை நியமனங்கள், தற்காலிக நியமனங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்ததன் மூலம் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தி.மு.க. அரசு ஒழித்து வருகிறது. இப்போது தனியார் சுயநிதி கல்லூரிகள், அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் ஆகியவற்றை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்ற அனுமதிப்பதன் மூலம் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை காவு கொடுக்கத் துணிந்திருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த சட்டத் திருத்த முன்வரைவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.