யாருடன் கூட்டணி: 29-ந்தேதி கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்- ஜி.கே. மணி
- டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது.
- செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 29-ந்தேதி சேலத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. பெயரில் அனுமதி வழங்கக் கூடாது என அன்புமணி தரப்பினர் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* வருகிற 29-ந்தேதி சேலத்தில் பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
* தமிழ்நாடு, புதுச்சேரி மாநில கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
* செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி சரியாக நடக்கும்.
* 2026 சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என்று மாநில அளவிலும், தேசிய அளவிலும் பார்க்கப்படுகிற முக்கியமான கூட்டமாக கருதப்படுகிறது.
* கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறோம்.
* டாக்டர் ராமதாஸை கொச்சைப்படுத்தாதீர்கள். அவமானப்படுத்தாதீர்கள். அவர்கள் வேதனைப்படுகிறார். கண் கலங்குகிறார். அதோடு வேகமாகிறார். நீங்கள் பேச பேச மக்கள் மத்தியில் டாக்டர் ராமதாஸ் வலிமை அதிகரித்து வருகிறது.
* டாக்டர் ராமதாஸ் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை நடத்த அதிகாரமில்லை என்பது எவ்வளவு அநாகரீகமானது. வெட்கக்கேடானது. வன்மையாக கண்டிக்கிறேன்.
இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.