தமிழ்நாடு

எங்களுக்கு 5 எம்.பி.க்கள் கூட்டணியில் 10 பேர்... மலையின் மலைக்க வைக்கும் கணக்கு

Published On 2023-06-03 08:30 GMT   |   Update On 2023-06-03 10:16 GMT
  • கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும்.
  • அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள்.

வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து பா.ஜனதா 5 எம்.பி.க்களுக்கும், கூட்டணி கட்சிகள் 10 எம்.பி.க்களும் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்பது அண்ணாமலையின் மலைக்க வைக்கும் கணக்கு.

இதுதான் சரியான கணக்கு என்பதற்கு அண்ணாமலை டெல்லிக்கு சொல்லியிருக்கும் விளக்கம் வித்தியாசமானது. அதாவது தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பலவீனமாகத்தான் உள்ளது. எனவே பா.ஜனதா தலைமையில் பா.ம.க. உள்பட சில கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக அமையும்.

இப்படி கூட்டணி அமைத்து 25 தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிட வேண்டும். தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பங்கிட்டு கொடுக்க வேண்டும். இதில் பா.ஜனதா 5 தொகுதிகளில் நிச்சயம் ஜெயிக்கும்.

ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால் ஒற்றை இலக்கத்தில் தான் சீட் தருவார்கள். அதில் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில்தான் பா.ஜனதா வெற்றி பெறும் என்று கூறி இருக்கிறார். ஆனால் டெல்லி மேலிடம் தி.மு.க. வலுவான அணியாக இருப்பதால் இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதே பலம் சேர்க்கும். 2026-ல் தமிழக அரசியல் களம் என்பது தி.மு.க.-பா.ஜனதா இடையேதான் இருக்கும் என்று உறுதியாக கூறி இருக்கிறார்கள். இப்போது பா.ஜனதா போட்டியிட விரும்பும் தொகுதியில் பணிகளை செய்யுங்கள் என்று டெல்லி மேலிடம் அண்ணாமலைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் எங்கள் கூட்டணியில் பா.ஜனதாவும் இருக்கும். இது உறுதியான கூட்டணி இதில் எந்த குழப்பமும் வேண்டாம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனும் கூறினார். டெல்லியில் நடந்த உரையாடல்கள் பற்றி அண்ணாமலையிடம் கேட்ட போது "நான் பல விஷயங்களுக்காக டெல்லி செல்வேன். அதையெல்லாம் பொது வெளியில் சொல்ல முடியாது. யூகங்களுக்கு பதில் சொல்லவும் விரும்பவில்லை" என்றார்.

Tags:    

Similar News