தமிழக சட்டசபை நாளை கூடுகிறது: சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கிளப்ப அ.தி.மு.க. முடிவு
- 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை சட்டசபைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்.
- மொத்தம் 16 அமர்வுகளாக சட்டசபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.
சென்னை:
தமிழக சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் அந்த மாதம் 15-ந்தேதி வரை நடைபெற்றது.
நிறைவு நாள் விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார்.
இதையடுத்து 2024-25 நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் 19, 20-ந்தேதிகளில் தாக்கல் செய்யப்பட்டன.
பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 22-ந்தேதி வரை நடைபெற்றது. நிறைவாக விவாதத்துக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதில் அளித்தனர்.
இதையத்து பாராளுமன்ற தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல் சட்டசபை கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இப்போது பாராளுமன்ற தேர்தல் அனைத்தும் முடிந்து மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியும் மீண்டும் அமைந்துள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசின் துறை வாரியான செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும், மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவும் சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 24-ந்தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு முதலில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் சட்டசபை கூட்டம் ஜூன் 24-ந்தேதிக்கு பதிலாக, முன்கூட்டியே 20-ந்தேதி தொடங்கும் என்று அப்பாவு அறிவித்தார்.
அதன்படி சட்டசபைக் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. நாளைய கூட்டத்தில் மறைந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் நாளைய கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது.
அதன் பிறகு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சட்டசபை காலை 10 மணிக்கு கூடும். வழக்கமாக காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை நிகழ்வுகளை காலை 9.30 மணிக்கு தொடங்குவதற்காக விதிகள் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 21-ந்தேதி சட்டசபை கூடும் போது இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறப்படும்.
அதன் பிறகு 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை சட்டசபைக் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும். 29-ந்தேதி வரை மற்ற நாட்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மாலையில் 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் சட்டசபை கூட்டம் நடைபெறும்.
அதாவது மொத்தம் 16 அமர்வுகளாக சட்டசபை கூட்டத்தை நடத்த உள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அமைச்சர்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் புகழ்ந்து பேசுவார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் தோல்வி அடைந்துள்ளதால் அது பற்றியும் ஆளும் கட்சியினர் விமர்சிப்பார்கள். இது மட்டுமின்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து சவால்கள் விட்டும் பேசுவார்கள்.
மானியக் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த விவாதங்கள் அனல் பறக்கும். பதிலுக்கு எதிர்க்கட்சியான அ.தி.மு.க. சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கிளப்புவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கொலை-கொள்ளைகளை பட்டியலிட்டு பேச முடிவு செய்துள்ளனர்.
அது மட்டுமின்றி மேகதாது விவகாரம், விவசாயிகள் பிரச்சனை, நெல் கொள்முதல் நிலையங்களில் தார்பாய் போதிய அளவு இல்லாததால் மழையில் நனையும் நெல் மூட்டைகள் பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர குடிநீர், மின்வெட்டு, சாலை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். துறை சார்ந்த பிரச்சனைகளையும் எடுத்துக் கூற உள்ளனர்.
ஒவ்வொரு துறை வாரியான விவாதத்துக்கும் அந்தந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். சட்டசபை கூட்டம் முடியும் இறுதி நாளான 29-ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு விரிவாக பதில் அளித்து பேசுவார்.
நாளை முதல் 29-ந்தேதி வரை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் கடுமையாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடுகள் மாறி உள்ளதால் அதுபற்றி ஆளும் கட்சியினர் விமர்சிப்பார்கள் என்பதால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கவும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தயாராக இருப்பதாக தெரிகிறது.
எனவே இந்த சட்டசபை கூட்டத்தொடரில் அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.