தமிழ்நாடு செய்திகள்

கோவையில் என்னை தோற்கடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து போராடும்

Published On 2024-03-24 15:02 IST   |   Update On 2024-03-24 15:02:00 IST
  • தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம்.
  • தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார்.

கோவை:

பாரதிய ஜனதா மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தேர்தல் நெருங்கும்போது ஏப்ரல் 10-க்கு பிறகு தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேரும். என்னை தோற்கடிக்க தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் ஒன்று சேர்ந்து போராடும்.


குளுமையாக இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளே காரணம் ஆகும். கோவையில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. மாஸ்க் இல்லாமல் இருக்க முடியவில்லை.

பணம் செலவிடமாட்டேன் என நான் பேசியதை எடப்பாடி பழனிசாமி முழுமையாக கேட்கவில்லை. டீ குடிக்க மற்றவர்களிடம் காசு வாங்கி கொடுப்பவர் தான் எடப்பாடி பழனிசாமி. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கூட கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நடந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

நான் வருகிற புதன்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்து மாநில தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து 3, 4 நாட்கள் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் தேர்தல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

நீங்கள் வேட்பாளராக இருந்தால் எப்படி பணியாற்றுவீர்களோ, அதே போல் பணியாற்ற வேண்டும். அடுத்த 25 நாட்கள் நாம் எப்படி பணியாற்ற போகிறோம் என்பதே வெற்றியை உறுதி செய்யும்.


கோவையில் நாம் வெற்றியை சுவைத்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. வெவ்வேறு காரணங்களால் வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறோம். 20 ஆண்டுகள் ஆனாலும் நமது பழைய பணிகளை மக்கள் போற்றுகின்றனர்.

2 டிரங்கு பெட்டிகளுடன் 2002-ல் கோவைக்கு படிக்க வந்தேன். கடின உழைப்பிற்கு மரியாதை கொடுக்கும் ஊர் இந்த ஊர். கோவையில் பிறந்து வாழ்ந்த பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். தற்போது தேர்தலில் போட்டியிடுகிறேன். கோவை மீது எனக்கு பாசம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

கோவை எங்களது கோட்டை என்று பலரும் சொல்லி வருகின்றனர். கோட்டையில் ஓட்டைபோட நான் வரவில்லை. மக்களின் மனங்களை வெல்லவே வந்துள்ளேன்.

இந்த தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் இல்லை. மக்களை சந்திப்பது மட்டுமே நமது எண்ணம். டிபன் பாக்ஸ் கொடுத்தோம், வேறு பரிசு பொருட்கள் கொடுத்தோம் என்று வெற்றி பெற வேண்டும் என்பது இல்லை. தேர்தலில் பா.ஜ.க. வென்று மீண்டும் பிரதமராக மோடி வருவார். இதில் 400 தொகுதிகளில் வெற்றியா, 450 தொகுதிகளில் வெற்றியா என்பது கேள்வி?

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News