G Pay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம்: அண்ணாமலை மீது திமுக புகார்
- தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும்.
- கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி உள்ளனர்.
கோவை:
தமிழகம்-புதுச்சேரியில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில் கோவை வடக்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் பத்ரி (எ) க. பழனிச்சாமி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். அதில்,
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து, தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு G Pay மூலம் பணம் அனுப்பி வருகிறார்.
மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி நேற்று மாலையுடன் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் தொகுதியை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக சட்டவிரோதமாக கோவை பாராளுமன்ற பாஜக தேர்தல் அலுவலகத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு G Pay மூலம் ஓட்டுக்கு பணம் வினியோகம் செய்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.