வடமாநில தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி கொலை: வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
- தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
- சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தை சேர்ந்தவர் விவேகானந்தர். இவரது மனைவி நித்யா (28 )இவர் கடந்த மார்ச் 11-ந்தேதி ஆடு மேய்க்க சென்ற போது கற்பழித்து கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த மே 13-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஜேடர்பாளையம், அருகே சரள மேட்டில் முத்துச்சாமி என்பவரின் கரும்பாலையில் பணிபுரித்து வந்த வட மாநில தொழிலாளர்கள் 4 பேர் சிமெண்ட் அட்டையால் தடுக்கப்பட்ட அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிமெண்ட் அட்டையை உடைத்து உள்ளே புகுந்து தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் ராஜேஷ்( 19,) சுகிராம்( 29,) எஸ்வந்த்( 18, )கோகுல் (28 )ஆகிய 4 பேர் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கரூர் மாவட்டம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் ஒடிசாவை சேர்ந்த ராஜேஷ் என்கிற வாலிபர் கடந்த மே 17-ந் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜேடர் பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இது சம்பந்தமாக 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதில் முக்கிய நபரான கருக்கம்பாளையத்தை சேர்ந்த தீபக், ராகுல் மற்றும் பாகம்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் ஆகிய 3 பேரையும் வட மாநிலத்த தொழிலாளிகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா பரிந்துரையை ஏற்று 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உமா உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் உள்ள தீபக், ராகுல், சக்திவேல் ஆகிய 3 பேருக்கும் குண்டர் சட்டத்தில் கைதான நகல் போலீசாரல் வழங்கப்பட்டது.