தமிழ்நாடு

8 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று காங்கிரஸ் ஆதரவு கேட்கிறது: 3-ந் தேதி முதல் தொடக்கம்

Published On 2024-03-30 07:38 GMT   |   Update On 2024-03-30 07:38 GMT
  • மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.
  • தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வீட்டுக்கு வீடு உத்தரவாதம் என்கிற அடிப்படையில் புதுவிதமான பிரசாரத்தை கையில் எடுக்க உள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் 8 கோடி வீடுகளுக்கு நேரில் சென்று ஆதரவு கேட்க அந்த கட்சி முடிவு செய்துள்ளது.

இந்த பிரசார பயணம் வருகிற 3-ந் தேதி தொடங்குகிறது. அப்போது காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பு தங்களது ஆட்சியில் செய்துள்ள சாதனைகளை பட்டியல் போட்டு எடுத்துச் செல்ல காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். மத்திய அரசுக்கு எதிரான பிரசாரத்தையும் காங்கிரசார் எடுத்து வைக்க உள்ளனர்.

இது தவிர சமூக ஊடகங்களை பயன்படுத்தியும் பிரசாரம் செய்ய காங்கிரஸ் கட்சி வியூகம் அமைத்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5-ந் தேதி வெளியிடப்பட உள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளனர்.

ஏப்ரல் 6-ந் தேதியில் இருந்து பிரசார பயணத்தின் போது வீடு வீடாக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்திலும் வீடு வீடாக சென்று காங்கிரஸ் நிர்வாகிகள் ஓட்டு கேட்க உள்ளனர். இதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல், பிரியங்கா, கார்கே ஆகியோர் தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.

இதையடுத்து தமிழக காங்கிரசார் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News