தமிழ்நாடு செய்திகள்
பச்சை பசேலென காட்சி அளிக்கும் தேயிலை தோட்டங்கள்.

நீலகிரியில் தொடர் மழையால் பசுமைக்கு திரும்பிய தேயிலை தோட்டங்கள்

Published On 2022-05-14 10:09 IST   |   Update On 2022-05-14 10:09:00 IST
நீலகிரி மாவட்டம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.
அரவேணு:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பகல் நேரங்களில் கடும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலை நிலவியது.

இதனால் தோட்டங்களில் ஈரப்பதம் வெகுவாக குறைந்து வந்தது. மேலும் சிவப்பு சிலந்தி நோய் தாக்கி வந்தது. இதனால் மஞ்சள் நிறமாக மாறிய இலை உதிர்ந்து வந்ததுடன் தேயிலை மகசூல் வெகுவாக பாதித்தது.

இந்த நிலையில் கோத்தகிரி உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதுடன் போதிய சூரிய வெளிச்சத்துடன் இதமான காலநிலை நிலவியதால் தேயிலைச் செடிகளில் சிவப்பு சிலந்தி நோய் தாக்குதல் நீங்கியது.

மேலும் கொழுந்துகள் வளர்ந்து பச்சை தேயிலை மகசூல் வெகுவாக அதிகரித்து வருகிறது. தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி வருகின்றன.

இதைப் பார்ப்பதற்கு பச்சை கம்பளம் விரித்தது போல காணப்படுகிறது. இது சுற்றுலாப் பயணிகளில் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் நின்று புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

இதேபோல மாவட்டம் முழுவதும் தேயிலை தோட்டங்கள் பசுமைக்கு திரும்பி பச்சை பசேலென காட்சி அளிக்கின்றன.




Similar News