செய்திகள்

கோவையில் இருந்து ரெயில் மூலம் ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேர் கைது

Published On 2019-02-07 04:58 GMT   |   Update On 2019-02-07 04:58 GMT
கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ரூ. 5 கோடி ஹவாலா பணம் கடத்திய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #HawalaMoney
கோவை:

கோவையில் இருந்து ரெயில் மூலம் கொல்லத்துக்கு ஹவாலா பணம் கடத்தி வரப்படுவதாக பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து அவர் போலீசாருடன் வனவக்கோடு ரெயில் நிலையம் சென்றார். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வட மாநிலத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு ரெயில் வந்தது.

ரெயில்வே போலீசார் உதவியுடன் அந்த ரெயிலில் சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு பெட்டியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் இருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

அவர்களது மேல் சட்டையில் சோதனை செய்த போது சட்டை போல் உள்ளே பனியன் அணிந்து இருந்தனர். அதில் ரூ. 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது. ரூ. 2 கோடி பணத்தை அவர்கள் பனியனில் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது.

இது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் கொல்லத்தை சேர்ந்த சுரேந்திரன், விவேக், மத்திய பிரதேசத்தை சேர்ந்த பதாம் சிங், பிரமோத், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபாகரன் என்பது தெரிய வந்தது.

இந்த பணத்தை கோவையில் இருந்து கொல்லத்துக்கு கடத்தி சென்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் பல முறை இவர்கள் ஹவாலா பணத்தை கேரளாவுக்கு கடத்தி சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களிடம் எப்படி பழக்கம் ஏற்பட்டது? கோவையில் யாரிடம் இருந்து இந்த பணத்தை வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #HawalaMoney
Tags:    

Similar News