செய்திகள்

திண்டுக்கல்லில் தாசில்தார் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2018-11-03 04:57 GMT   |   Update On 2018-11-03 04:57 GMT
திண்டுக்கல்லில் தாசில்தார் வீடு புகுந்து நகை-பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் நாகல்நகர் பால்சாமி அய்யர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் தாஜூதீன். இவர் தனி தாசில்தாராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு தாஜூதீன் மற்றும் அவரது மனைவி ஷாகிதா பானு ஆகியோர் வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டனர்.

இன்று காலை எழுந்து பார்த்தபோது ஷாகிதா பானுவின் 6½ பவுன் தங்க சங்கிலி மற்றும் தாஜூதீன் பையில் இருந்த ரூ.10 ஆயிரம் பணம் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தாசில்தார் வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் வீட்டின் கதவு பீரோ எதுவும் உடைக்கப்படவில்லை. கொள்ளையர்கள் எவ்வாறு வீட்டுக்குள் புகுந்து திருடிச் சென்றனர் என்பது தெரியாமல் அவர்கள் குழம்பினர். தாசில்தாருக்கு தெரிந்த நபர்கள் யாரும் கைவரிசை காட்டியுள்ளனரா? என தெரியவில்லை.

இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News