விளையாட்டு

கடைசி நேரத்தில் ரத்தான மெஸ்ஸி - மோடி சந்திப்பு - ஏன் தெரியுமா?

Published On 2025-12-15 23:11 IST   |   Update On 2025-12-15 23:11:00 IST
  • டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
  • போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் தங்களின் மூன்று நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டனர்.

கொல்கத்தா, ஐதராபாத், மும்பை மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த சுற்றுப்பயணத்தில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணி வீரர்களும் அவருடன் வந்திருந்தனர்.

இன்று, மதியம் மும்பையில் இருந்து டெல்லி வந்தடைந்த மெஸ்ஸியும் அவரது குழுவும் அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

மாலை 4 மணிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா இந்திய கிரிக்கெட் அணியின் 10வது எண் ஜெர்சியை மெஸ்ஸிக்கு பரிசளித்தார்.

மேலும் 2026-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான டிக்கெட்டைப் பரிசாக வழங்கி, அவரைப் போட்டிகளை காண வருமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே இன்று டெல்லியில் மெஸ்ஸி பிரதமர் மோடியை சந்தித்து பேசும் நிகழ்வுக்கு திட்டமிடப்பட்டுருந்தது. பிரதமரை சந்திக்க மெஸ்ஸிக்கு 21 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த சந்திப்பு ரத்து செய்யப்படது.

கடும் பனிமூட்டம் காரணமாக மும்பையில் இருந்து டெல்லி வந்த மெஸ்ஸின் விமானம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது.

அதே நேரத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஓமன், எத்தியோப்பியா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

மெஸ்ஸி விமானம் தாமதமானதாலும், பிரதமரின் வெளிநாட்டு பயணம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்ததாலும் பிரதமர் மோடி மெஸ்ஸி சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

Tags:    

Similar News