கிரிக்கெட் (Cricket)

INDvsPAK: முன்னாள் பாகிஸ்தான் வீரரை கட்டியணைத்த ரோகித் சர்மா- வைரலாகும் வீடியோ

Published On 2026-02-16 11:22 IST   |   Update On 2026-02-16 11:22:00 IST
  • பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
  • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் போது இரு நாட்டு கேப்டன்களும் கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

கொழும்பு:

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.

இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.

கிரிக்கெட் போட்டியின்போது டாஸ் நிகழ்வில் இரு அணிகளின் கேப்டன்கள் கை குலுக்கி கொள்வது வழக்கமானது. இதே போல போட்டி முடிந்த பிறகும் வீரர்கள் கைகுலுக்கி கொள்வார்கள்.

பகல்காம் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக பாகிஸ்தான் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய வீரர்கள் ஆசிய கோப்பை போட்டியின்போது கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

அதேபோல நேற்றைய போட்டியின் போது இருநாட்டு கேப்டன்கள் மீண்டும் கை குலுக்கலை தவிர்த்து கடந்து சென்றனர்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இந்திய டி20 அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் இருவரும் மைதானத்தில் சந்தித்து கொண்டனர். அப்போது இருவரும் கட்டியணைத்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கி கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவுக்கு சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல ரசிகர்கள் இதுதான் ஸ்போர்ட்மேன்ஷிப் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மைதானத்தில் அரசியல் இருக்க கூடாது எனவும் கருத்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News