இந்திய அணியின் வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறேன்- கேப்டன் சூர்யகுமார் யாதவ்
- உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார்.
- பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
கொழும்பு:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது.
இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்னும் (10 பவுண்டரி , 3 சிக்சர்) , கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி), ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சைம் அயூப் 3 விக்கெட்டும், கேப்டன் சல்மான் ஆகா, சகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 61 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 20 ஓவர் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் உலக கோப்பையில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியை பெற்றது.
உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்), சகின்ஷா அப்ரிடி 19 பந்தில் 23 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ஹர்திக் பாண்ட்யா, பும்ராஅக்ஷர் படேல் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், திலக் வர்மா, தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்நிலையில் இந்த வெற்றியை நாட்டுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த வெற்றி இந்தியாவுக்கானது. நாங்கள் ஆட விரும்பிய அதே வகையான கிரிக்கெட்டை ஆடினோம். இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்தது சிறந்த முடிவாக அமைந்தது.
இஷான் கிஷன் புதுமையான சிந்தனையுடன் செயல்பட்டார். 0/1 என்ற நிலையில் யாராவது பொறுப்பேற்க வேண்டி இருந்தது, அதை அவர் அற்புதமாக செய்தார். கொஞ்சம் சரிவு இருந்தது. திலக்வர்மா, துபே, ரிங்கு ஆகியோர் பேட்டிங் செய்த விதம் பாராட்டத்தக்கது.
முதலில் பேட்டிங் செய்யும் போது பனிப்பொழிவு அல்லது ஆடுகளம் எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. நாங்கள் எடுத்த ஸ்கோர் சராசரியை விட 15 ரன்கள் அதிகம் என உணர்ந்தோம். 155 ரன்கள் என்பது போட்டியை நெருக்கடியாக மாற்றி இருந்திருக்கும்.
ஹர்திக் பாண்டியா சிறப்பான பந்துவீச்சு தொடக்கத்தை கொடுத்தார். உலகின் தலைசிறந்த பவுலர் என்பதை பும்ரா வெளிப்படுத்தினார். பந்துவீச்சில் அனைவரும் வழங்கிய பங்களிப்பை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். நாங்கள் ஒரு அணியாக நல்ல நேரம் செலவிட்டு, அகமதாபாத் பயணத்தின் போது அடுத்த ஆட்டங்களை பற்றி சிந்திப்போம்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை வருகிற 18-ந் தேதி அகமதாபாத்தில் எதிர் கொள்கிறது.