உலக கோப்பை கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்குள் நுழைய ஈரான் அணிக்கு டிரம்ப் அனுமதி என தகவல்
- சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பானிடோ தகவல் தெரிவித்தார்.
- ஈரான் அணி லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து , பெல்ஜியம், எகிப்து அணிகளுடன் மோதுகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந் தேதி முதல் ஜூலை 19-ந் தேதி வரை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
இந்த போட்டியில் ஈரான் அணி பங்கேற்குமா? என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அந்நாடு மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதற்காக அமெரிக்காவை பழி தீர்க்கப்போவதாக ஈரான் அறிவித்திருந்தது.
இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கேற்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை கால்பந்து போட்டிக்காக ஈரான் அணி அமெரிக்கா வருவதற்கு அனுமதிக்கப்படும் என்று டிரம்ப் உறுதி அளித்துள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் ஜியானி இன்பானிடோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது," தற்போதைய நிலவரம் குறித்து டிரம்ப்பை சந்தித்து விவாதித்தோம். அவர் ஈரான் அணி அமெரிக்கா வருவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதேபோல ஈரானுடனும் நாங்கள் பேசுவோம்" என்றார்.
ஈரான் அணி லீக் ஆட்டங்களில் நியூசிலாந்து , பெல்ஜியம், எகிப்து அணிகளுடன் மோதுகிறது. இந்த போட்டிகள் அமெரிக்காவில் நடக்கிறது.