கிரிக்கெட் (Cricket)

வீடியோ: சையத் முஷ்டாக் அலி தொடரில் வரலாற்று சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

Published On 2025-12-02 15:58 IST   |   Update On 2025-12-02 15:58:00 IST
  • முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி 177 ரன்கள் எடுத்தது.
  • இதனையடுத்து விளையாடிய மகாராஷ்டிரா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா:

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மகாராஷ்டிரா (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மகாராஷ்டிரா அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

முன்னதாக இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம் புதிய சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். அதன்படி சையது முஸ்தாக் அலி கோப்பை தொடரில் இளம் வயதில் சதம் விளாசிய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். வைபவ் 61 பந்துகளில் 108 ரன்களை விளாசினார். 14 ஆண்டுகள் 250 நாட்களில் வைபவ் சதம் அடித்து இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

Tags:    

Similar News