டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இந்தியா-தென்ஆப்பிரிக்கா இன்று மோதல்
- நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்சர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா அல்லது 3 வேகப்பந்து வீரரா என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மார்கிராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும், பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ யான்சென் (7 விக்கெட்), ரபாடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.