கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?: 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

Published On 2025-11-22 03:33 IST   |   Update On 2025-11-22 03:33:00 IST
  • முதல் டெஸ்டில் பாதியில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார்.
  • இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுகிறார்.

கவுகாத்தி:

தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா படுதோல்வி அடைந்தது. 124 ரன் என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டது. இதனால் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் கழுத்து வலியால் பாதியில் வெளியேறிய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 2-வது டெஸ்டில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்டில் சந்தித்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களம் இறங்குகிறது. வென்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும்.

டெஸ்டில் தோற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் வெற்றிக்காக இந்தியா கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோரும் ஆல்-ரவுண்டர் வரிசையில் ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோரும் உள்ளனர்.

பந்துவீச்சில் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் உள்ளனர்.

பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அந்த அணியில் மார்க்ராம், டோனி டி ஜோர்ஜி, ரிக்கல்டன், மார்கோ ஜான்சன், முல்டர்,ஸ்டெப்ஸ், ஹார்மர், கேசவ் மகராஜ் ஆகியோர் உள்ளனர்.

கடைசி டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா அணி உள்ளது. டிரா செய்தாலே தொடரை தென் ஆப்பிரிக்கா கைப்பற்றிவிடும். எனவே கடைசி டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News