சூப்பர் 8 சுற்று: கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எளிதாக வீழ்த்தியது தென்ஆப்பிரிக்கா..!
- 17.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா இலக்கை எட்டியது.
- ஜார்ஜ் லிண்டே ஆட்டமிழக்காமல் 21 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா தனது கடைசி லீக்கில் இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. சிகந்தர் ரசா அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்தார்.
பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மார்க்கிராம் 4 ரன்களிலும், டி காக் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரியான் ரிக்கெல்டன் 22 பந்தில் 31 ரன்களும், டெவால்டு பிரேவிஸ் 18 பந்தில் 42 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.
மில்லர் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் 24 பந்தில் 21 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 21 பந்தில் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் விளையாட உள்ளது.