நெருக்கடியின்போது சரியான முடிவை நாங்கள் எடுக்கவில்லை: உலகக் கோப்பை தோல்வி குறித்து சல்மான் ஆகா சொல்கிறார்
- ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவை.
- ஏனென்றால் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேறியதாக உணர வேண்டியிருக்கும்.
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடியது. இது அந்த அணிக்கு சாதகம் என பார்க்கப்பட்டது. ஆனாலும், அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. நேற்றைய போட்டியில் இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
தொடர்ந்து 4-வது முறையாக ஐசிசி தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் சரியான முடிவு எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சல்மான் ஆகா கூறியதாவது:-
ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவை. ஏனென்றால் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேறியதாக உணர வேண்டியிருக்கும். ஆகவே, நெருக்கடிக்கு உள்ளாகும்போது, சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
கடந்த 4 ஐசிசி தொடர்களில் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதற்கு முக்கிய காரணம் நெருக்கடியான நேரத்தில் எங்களுடைய பேட்டர்கள் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். நெருக்கடி அதிகரிக்கும்போது, முடிவு எடுக்கும் விசயத்தில் வளர்ச்சி அடைய வேண்டும். இது மிகவும் முக்கியம்.
ஏனென்றால், நெருக்கடி இருக்கும் போதெல்லாம், எங்களுடைய முடிவு அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. உலகக் கோப்பை அல்லது ஐசிசி தொடர் என்று வரும்பொது, அங்கே நெருக்கடி இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இல்லை என்றால், இதுபோன்றுதான் நடக்கும்.
இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.