கிரிக்கெட் (Cricket)

ஹர்மன்பிரித் கவுர் அதிரடி சதம்: இங்கிலாந்துக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா

Published On 2025-07-22 20:59 IST   |   Update On 2025-07-22 20:59:00 IST
  • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
  • அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி 318 ரன்கள் குவித்தது.

லண்டன்:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றன.

இந்நிலையில், இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளாக பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 26 ரன்னில் அவுட்டானார். 45 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா வெளியேறினார்.

ஹர்லின் தியோல் உடன் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் இணைந்தார். நிதானமாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த நிலையில் ஹர்லின் தியோல் 45 ரன்னில் ஆட்டமிழந்தார்.

கேப்டனுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணைந்து அதிரடியை வெளிப்படுத்தினார். ஜெமிமா 45 பந்தில் அரை சதம் கடந்து ஆட்டமிழந்தார்.

பொறுப்புடன் ஆடிய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் சதமடித்து அசத்தினார். அவர் 82 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில், இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 318 ரன்கள் குவித்தது. ரிச்சா கோஷ் 38 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதையடுத்து, 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News