கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்தை போல ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? நாளை மோதல்

Published On 2025-02-27 15:36 IST   |   Update On 2025-02-27 15:36:00 IST
  • பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது.
  • ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் அணிகள் நாளை மோதுகின்றன.

லாகூர்:

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற் றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற 8 நாடுகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டது. ஏ பிரிவில் இருந்து இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. பாகிஸ்தான், வங்கதேசம் வெளியேற்றப்பட்டன.

பி பிரிவில் இங்கிலாந்து அணி வெளியேறியது. ஆப்கானிஸ்தானிடம் நேற்று அதிர்ச்சிகரமாக தோற்றதால் அந்த அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளியுடனும் உள்ளன.

இந்தப் போட்டி தொடரின் 10-வது லீக் ஆட்டம் லாகூரில் நாளை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா- ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தது போல் ஹஸ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 107 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் இங்கிலாந்தை 8 ரன்னில் வீழ்த்தியது.

அந்த அணியில் இப்ராகிம் ஸத்ரன், கேப்டன் ஹஸ் மத்துல்லா ஷகிதி, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ரஷீத்கான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஸ்டீவ் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 352 ரன் இலக்கை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவுடன் மோத வேண்டிய 2-வது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரைஇறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் ஜோஸ் இங்கிலீஷ், மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், பென்துவர் சுயிஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

நாளைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் ஆஸ்திரேலியா அரை இறுதிக்கு முன்னேறிவிடும். ஆப்கானிஸ்தான் வெளியேற்றப்படும்.

Tags:    

Similar News