கிரிக்கெட் (Cricket)

சேப்பாக்கம் மைதானத்தில் 3-வது லீக் ஆட்டம்: நெதர்லாந்து-அமெரிக்கா நாளை மோதல்

Published On 2026-02-12 12:55 IST   |   Update On 2026-02-12 12:55:00 IST
  • ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.
  • ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 6 லீக் ஆட்டம் மற்றும் ஒரு சூப்பர் 8 சுற்று போட்டி என ஆக மொத்தம் 7 ஆட்டங்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி, கடந்த 8-ந்தேதி நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும் (டி பிரிவு), நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சையும் (டி பிரிவு) தோற்கடித்தன.

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3-வது போட்டி நாளை இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஏ பிரிவில் உள்ள நெதர்லாந்து- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

நெதர்லாந்து அணி அமெரிக்காவை தோற் கடித்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் (3 விக்கெட்) தோற்றது. 2-வது போட்டியில் நமீபியாவை (7 விக்கெட்) வீழ்த்தியது. அமெரிக்க அணி இந்தியாவிடம் 29 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 32 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

இந்திய அணி ஆடாவிட்டாலும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 ஆட்டங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது. இதேபோல நாளையும் ரசிகர்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடைபெறும் மற்ற போட்டிகளில் பி பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா-ஜிம்பாப்வே (கொழும்பு, காலை 11 மணி), கனடா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (டெல்லி, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. அந்த அணி முதல் போட்டியில் அயர்லாந்தை 67 ரன்னில் வீழ்த்தி இருந்தது. ஜிம்பாப்வேயும் 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஓமனை (8 விக்கெட்) தோற்கடித்தது.

இத்தாலி, நேபாளம் அணிகள் முதல் வெற்றிக்காக காத்திருக்கின்றன. இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

Tags:    

Similar News