null
புதுச்சேரியில் த.வெ.க. தனித்து போட்டியிட முடிவு
- புதுச்சேரியில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
- பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் என்.ஆர். காங்கிரசோடு இணைந்து புதுச்சேரியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார். இது தொடர்பாக அக்கட்சியின் தலைவரும் புதுச்சேரி முதலமைச்சருமான ராங்கசாமியோடு பேச்சுவார்த்தை நடத்த த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் முயற்சித்து வருகிறார்.
இந்தநிலையில் புதுவையில் செயல்படுத்த வேண்டிய பல திட்டங்கள் கிடப்பில் உள்ளதால் பா.ஜ.கவோடு கூட்டணியில் இருந்தால் தான் புதுச்சேரிக்கு வேண்டிய நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும்.
அதற்கு பா.ஜ.க கூட்டணியில் நீடித்தால் தான் சரியாக இருக்கும் என முதலமைச்சர் ரங்கசாமி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் தனித்து போட்டியிட த.வெ.க. தயாராகி வருகிறது.
இங்கு ஏற்கனவே என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜ.கவின் என்.டி.ஏ. கூட்டணி, காங்கிரஸ்- தி.மு.க.வின் இந்தியா கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஏற்கனவே களத்தில் உள்ள நிலையில் சார்லஸ் மார்டினும் புதிய கட்சி தொடங்கி போட்டியிட உள்ளார்.
இதனால், புதுச்சேரியில் 5 முனை போட்டி உருவாகும் சூழல் உருவாகியுள்ளது.