ரெயில் நிலைய நடைமேடையில் சாகசம் செய்த வாலிபர் கைது
- வீடியோ வைரலானதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர்.
- வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், சிலர் ரெயில்வே போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர்.
பீகாரில் கயா மாவட்டத்தில் உள்ள மான்பூர் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ஒரு இளைஞர் நடைமேடையில் சாகசம் செய்வது போன்ற காட்சிகள் டுவிட்டரில் வைரலாக பரவியது. அதில், ரெயில் நிலைய நடைமேடையில் நடந்து வந்த அந்த வாலிபர் திடீரென இரண்டு, மூன்று முறைகள் துள்ளி குதித்து ஆபத்தான முறையில் சாகசம் செய்வது போன்று காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்துள்ளனர். இதுதொடர்பான ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரின் டுவிட்டர் பதிவில், மான்பூர் சந்திப்பில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த இளைஞர் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் ஷேர்கள் பெறுவதற்காகவே இதுபோன்ற வீடியோக்களை பதிவு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ பல்லாயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், சிலர் ரெயில்வே போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டனர். அதே நேரம் சில பயனர்கள் நடைமேடை காலியாக இருப்பதாகவும், அந்த வாலிபரால் பயணிகள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.